தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடைபயணத்தை வள்ளியூர் நம்பியான் விளையில் தொடங்கினார். அவருக்கு பா.ஜ.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரர் நினைவு நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்க அண்ணாமலை சென்றார். அப்போது, அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணி மண்டபத்தில் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அப்போது ஆதித்தமிழர் கட்சியினர் அண்ணாமலையே திரும்பி போ, பா.ஜ.கவே வெளியேறு என கோஷம் எழுப்பினர்.
கோஷம் எழுப்பியவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மரியாதை செலுத்திய பின் வெளியே வந்த அண்ணாமலை போராட்டக்காரர்கள், கட்சிகாரர்களுக்கு வணக்கம் தெரிவித்து காரில் புறப்பட்டார். அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“