நீட் தேர்வால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்காக நடைபெற்ற உரிமை ஏந்தல் கூட்டத்தில், தமிழர்கள் சாதியைக் கடந்து ஒன்றுபட்டு இருக்கின்றனர் என இயக்குநர் அமீர் கூறிய கருத்துக்கு, இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்ததால், நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவி அனிதாவுக்காக தமிழ்நாடு இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பாக, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் வியாழக்கிழமை உரிமை ஏந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், பல இயக்குநர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
அப்போது, இயக்குநர் ரஞ்சித் நிகழ்ச்சியில் பேசியதாவது, “சாதியை ஒழிக்காத வரை தமிழ் தேசியம் காணல் நீர். சமூக நீதியற்ற இந்த சமூகத்தில் எத்தனை நாள் பெரியாரின் பெயரை சொல்லி அரசியல் செய்யப் போகிறோம்? நான் இன்னும் சேரியில் தான் இருக்கிறேன். எங்கள் சேரியில் பெரியாரின் பெயரில் தெருக்கள் உள்ளன. அதேபோல், ஊருக்குள் எத்தனை தெருக்களுக்கு அம்பேத்கரின் பெயர் உள்ளது? சேரிக்குள் நாங்கள் காமராஜர் பெயரை வைத்திருக்கிறோம். சாதியை ஒழிக்காத வரை தமிழ் தேசியம் எட்டாக் கனி என்பதை ஒரு தமிழனாக இருந்து சொல்கிறேன். சாதியால் பிரிந்திருக்கும் வரை, பிரித்து வைக்கப்பட்டிருக்கும் வரை தமிழ் தேசியத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”, என பேசினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “நாம் சாதி, மதங்களைக் கடந்து தமிழனாக இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.”, என கூறினார்.
இந்த கருத்துக்கு முரண்பட்ட இயக்குநர் ரஞ்சித் அப்போதே மேடையில் ஏறி, “தமிழ், தமிழன் என சொல்லி எத்தனை நாள் ஏமாற்ற போகிறீர்கள், தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கு. அவ்வளவு ஜாதிகள் உள்ளன. தமிழன் ஜாதியால் பிரிந்திருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். அனிதா இறந்திருக்கும் இந்த நேரத்திலாவது நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொண்டு ஜாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த சாதிய சமூகம் சாதியற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதே என் விருப்பம்”, என ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து இயக்குநர் ராம், அமீரை சமாதானப்படுத்த முயன்றார். இதையடுத்து அமீர் பேசியதாவது, “ரஞ்சித் எதையும் தவறாக சொல்லவில்லை. இந்த நாட்டில் நடக்கக்கூடிய அநியாயத்தைத்தான் ரஞ்சித் சொன்னார். எல்லாமே நடந்திருக்கின்றன. ஆனால், நாம் அந்த பாதையில் பயணிக்காமல், நேர்மறையான வழியில் பயணிக்க வேண்டும்”, என கூறினார்.
இதையடுத்து, அமீர், ரஞ்சித்தின் கருத்தை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த கருத்து முரண்பாட்டால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.