கடலோர காவல் படையினர் கடந்த 2021-ம் ஆண்டு கடத்தல் கும்பலிடம் இருந்து 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் பி.ஆர்.ஓ ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆதிலிங்கத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
வெளிநாடுகளி இருந்து கடல் வழியாக போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் கடத்தல் நடைபெறுவதாக தகவல் வெளியானது. மேலும், லட்சத் தீவுகள் அருகே மினிகோய் தீவுக்கும் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதிக்கும் இடையே போதை மருந்து கடத்தல்கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அப்பகுதியில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பை பலப்படுத்தி கண்காணித்து வந்தனர்.
2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல் மற்றும் வான் வழியான கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக் கிடமான 3 படகுகளை கடலோர காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.
அந்த படகுகளில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் 301 பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் ஈரான் நாட்டின் சாப்ஹர் துறைமுகத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த எல்.இ. நந்தனா, எச்.கே.ஜி.பி. தாஸ் பிரிய, ஏ.ஹெச்.எஸ். குணசேகர, எஸ்.ஏ.சேனாரத், டி.ரணசிங்க, டி நிசங்க உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 300 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட இந்த வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமியின் முன்னாள் பி.ஆர்.ஓ என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
300 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்திய வழக்கில் 10 இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு தேசிய குற்றப்புலனாய்வு முகமை அதிகாரிகளால் குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 14வது நபராக லிங்கம் என்கிற ஆதிலிங்கத்தை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் ஆதிலிங்கத்திற்கு சினிமா மற்றும் அரசியல் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆதிலிங்கத்தின் உறவினர் பாலாஜி என்பவர் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பில் இருப்பதன் மூலமாக விழிஞ்ஞம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் கடத்திய கும்பலைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது விசாரணையில் உறுதியானது.
குணசேகரன் பினாமியாக செயல்பட்ட ஆதிலிங்கம் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலமாக வரும் பணத்தை கிரிப்டோ கரன்சியிலும் சினிமாவிலும் அரசியலிலும் முதலீடு செய்த தகவல் விசாரணையில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஆதிலிங்கம் தமிழ் சினிமாக்களில் பிரம்மாண்டமாக போடப்படும் செட்டுகளுக்காக பைனான்சியர்களுக்கு நிதி உதவி அளித்ததும் தெரியவந்துள்ளது.
ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமியின் முன்னாள் பி.ஆர்.ஓ-வாக இருந்தார் என்பதால், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடிகை வரலட்சுமியிடம் விசாரிக்க அழைப்பு விடுத்ததாகவும், ஆனால், நடிகை வரலட்சுமி ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதாக பதில் அளித்ததாக செய்திகள் வெளியானது.
இதனிடையே, நடிகை வரலட்சுமி தனக்கும் ஆதிலிஙகத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என்றும், விசாரணைக்கு வருமாறு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த நடிகை வரலட்சுமி, “என்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் 5 ஆண்டுகளுக்கு முன்பே வேலையில் இருந்து நின்றுவிட்டார். ஆதிலிங்கம் தொடர்பாக NIA அதிகாரிகள் எனது தாயாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு என்னை யாரும் அழைக்கவில்லை” என தெரிவித்தார்.
300 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் பி.ஆர்.ஓ ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆதிலிங்கத்துக்கு சினிமா துறையில் அரசியலில் இன்னும் யார் யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்று என்.ஐ.ஏ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.