இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் மற்றும் புராதன பொருள்கள் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவை அமைத்து, 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டன.
துணை ஆணையர் கவிதா பணியிடை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் :
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து பிறப்பித்த தமிழக அரசணைக்கு கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இடைக் கால தடை விதித்தது உத்தரவிட்டனர்.
இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கு கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணை எதிர்த்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிபிஐ சார்பில் தாக்கல் செய்த கடிதத்தில், சிபிஐ ஆள் பற்றாக்குறை மற்றும் பணி பளூ காரணமாக சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது எனவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவிக்கபட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரிக்க முடியாது என சொல்லிவிட்டதால், அரசாணையை எதிர்த்த வழக்கு விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தனர்.
மனுதரார் யானை ராஜேந்திரன் ஆஜராகி, முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ள கூடுதல் ஆணையர் கவிதா அறநிலையத்துறை பணிகளில் மறைமுகமாக ஈடுபடுபதாகவும், அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கும், இந்துசமய அறநிலையத்துறைக்கும் உத்தரவிட வேண்டுமென கோரினார்.
இதுகுறித்து விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.