அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளேட்டில் நேற்று(ஏப்.22) வெளியான கட்டுரையொன்றில், “எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக-பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது.
இந்திய அரசியலில் அதிமுகவும் பாஜகவும் ‘இரட்டைகுழல் துப்பாக்கியாய்’ செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை இரு கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்” என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கட்டுரையால் அதிமுகவும் பாஜகவும் வரும் தேர்தல்களில் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இன்று (திங்கள்) சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தம்பிதுரை, “’நமது புரட்சி தலைவி அம்மா’ நாளேட்டில் வெளியான கட்டுரை தவறானதாக இருக்கக்கூடும். மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருப்பது என்பது வேறு, கட்சிகள் இணக்கமாக இருப்பது என்பது வேறு. இன்றைக்கு இரட்டை குழல் துப்பாக்கியே இல்லை. ஒற்றைக்குழல் துப்பாக்கிதான் உள்ளது” என தெரிவித்தார்.
இதே கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக நாளிதழில் கட்டுரை எழுதியவர் பாஜகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது. அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது கட்டுரை மட்டுமே. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் கூறுவது நடக்காது. ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்" என்றார்.