/indian-express-tamil/media/media_files/2025/05/26/jYCJhPMFW6RobDRELOWt.jpeg)
சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி மேம்பாடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் எதிர்கட்சியான அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஒரு பக்கம் தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் புதிதாக கட்சி தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய் தனது கட்சியினருடன் இணைந்து தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் எதிர்கட்சியான அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்ற தீவிரமாக தயாராகி வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து 2 முறை ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க கடந்த தேர்தலில் 50க்கு மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு கூட்டணி கட்சியான பா.ஜ.க. தான் காரணம் என்று கூறியது. இதனால் அப்போது பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி இல்லாமல் அ.தி.மு.க தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவியது.
அதே சமயம் வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மீண்டும் இணையும் என்று கூறப்பட்டது. அதன்படி சமீபத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன்படி தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் நடைபெற்ற கொடி ஏற்றும் விழா மற்றும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட விவசாய பொருட்கள், விலையில்லா ஆடு மற்றும் பசுமாடு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ”தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அவருக்கு பின் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க இருக்கும் வரை தி.மு.க கனவு பலிக்காது.
தி.மு.க தற்போது நடத்தி வரும் மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் என அனைத்திற்கும் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு கொண்டு வரப்போகும். ஸ்டாலின் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. அவர் செய்வது எல்லாம் போட்டோஷூட். நாங்கள் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் இன்றைய நிலை தெரியாமல் மக்களின் மனநிலை என்ன என்று புரியாமல் பேசுகிறார்.
ஏழைகளின் நலனுக்காக அம்மா மெடிக்கல் தொடங்கினோம். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதையும் மூடிவிட்டார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த பல திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்டது. எங்கு சென்றாலும் ரூ1000 கொடுக்கிறோம் என்று மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கூறி வருகின்றனர். இந்த பணம் அவர்கள் வீடுகளில் இருந்து எடுத்து கொடுக்கிறாகளா? விஞ்ஞானத்தில் ஊழல் செய்ததுதான் தி.மு.க.
அ.தி.மு.க கட்சி எப்படி பா.ஜ.க.வுடன் எப்படி கூட்டணி வைக்கலாம் என்று முதல்வர் சட்டமன்றத்தில் கேட்கிறார். இது எங்கள் கட்சி நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைந்ததால் இவர்களின் 4 ஆண்டுகால ஊழல் வெளியில் வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். ஒரு கட்சி கூட்டணியில் இணைந்ததற்கே இப்படி என்றால் இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர உள்ளது. அப்போது என்ன செய்வார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.