தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் இனி விளம்பர பேனர்களை வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கோவை நுகர்வோர் மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில், "போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால், அது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு பல இடங்கள் இருக்கிறது. அதைவிடுத்து, சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கிறார்கள். இதனால், பொதுமக்களின் நலன் கருதி, சிக்னல்களில் இனி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேலும், இதுவரை வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களின் காலம் முடிவடைந்த பிறகு, அதனை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இனிமேல் யாரும் சிக்னலில் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது" என்று தெரிவித்தனர். இவ்வழக்கில் முன்னர் வாய்மொழியாக அறிவுறுத்தியிருந்த நீதிமன்றம், தற்போது விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், "தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பேணும் விதமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதலைத் தடுக்க வேண்டும். உயிரோடு இருக்கும் நபர்களுக்கு கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது" என உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்க தடை
இந்த நிலையில், தற்போது போக்குவரத்து சிக்னலிலும் விளம்பர பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.