நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலை ஏற்பட்டால், யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து அந்த சமயத்தில் முடிவு செய்யப்படும் என தனியரசு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பிளவுபட்டது. சரியான தலைமை இல்லாமல் அதிமுக-வில் தற்போது வரை குழப்பான நிலையே நீடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி-ஓ பன்னீர் செல்வம் அணிகள் இணைந்துள்ள போதிலும், ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. காரணம் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தான்.
திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களாக கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூல்நிலைக்கு முக்கிய காரணமாக பாஜக திகழ்வதாக குற்றம்சாட்டினர்.
தமீமுன் அன்சாமி கூறும்போது, அதிமுக-வை பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து விவாதித்தோம். தமிழகத்தின் எதிர்கால நலன் மற்றும் சமூக நீதியை குலைக்கும் பாஜகவின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்துவிடக்கூடாது.
திராவிட கட்சிகளின் நலனை பாதுகாப்பது முக்கியமானது. ஆகவே, தற்போது அதிமுகவை அழிப்பார்கள் பின்னர் திமுகவை அழிப்பார்கள். கட்சியை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தங்களுக்கு யார் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, வெளியே இருப்பவர்கள் செய்யக் கூடாது. அதிமுக-வை பாதுகாக்க டிடிவி தினகரனை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார்.
தனியரசு கூறும்போது, தற்பேதைய நிலையில் யார் பக்கமும் செல்வதாக முடிவு செய்யவில்லை. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலை ஏற்பட்டால், யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து அந்த சமயத்தில் முடிவு செய்யப்படும். அது குறித்து அப்போது மூவரும் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்று கூறினார்.