தி.மு.க ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் 2006-2011-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலகம் தி.மு.க ஆட்சிக் காலத்தில், 2010-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி திறக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் ஓராண்டு புதிய தலைமைச் செயலகத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்தது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு பதவியேற்ற பின்னர், புதிய தலைமை செயலகம் செயல்படவில்லை, மேலும், இதற்கு முன்பு நடந்தது போல, சென்னை கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் தான் சட்டசபை கூட்டங்கள் நடக்க தொடங்கின.
அதே நேரத்தில், ஜெயலலிதா அரசு, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது. மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டடம் கட்டுவதில், முறைகேடுகள் நடந்ததாகக் கூறியது. இது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் டிசம்பர் 2011-ல் விசாரணை ஆணையம் அமைத்தது.
இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும் 2018-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, 2018-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு விசாரணை நடத்த அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் பொதுப் பணித் துறைக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறை காட்ட மறுக்கிறது.
எனவே, 2018-ம் ஆண்டு தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான, மேல் முறையீட்டு வழக்கில் என்னையும் இணைக்க வேண்டும் என்று மனுவில் ஜெயவர்த்தன் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.