Advertisment

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இபிஎஸ்-ஓபிஎஸ் பொதுக்குழு செல்லாது : டிடிவி.தினகரன் பேட்டி

அதிமுக பொதுக்குழு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என டிடிவி.தினகரன் பேட்டியளித்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk general body meeting, aiadmk, aiadmk merger, aiadmk crisis, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, ttv.dhinakaran, v.k.sasikala

அதிமுக பொதுக்குழு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என டிடிவி.தினகரன் பேட்டியளித்தார்.

Advertisment

அதிமுக.வின் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்து செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழுவை நடத்தின. இந்தக் கூட்டத்திற்கு அம்மா அணியின் பொதுச்செயலாளரான சசிகலாவின் அனுமதியை பெறவில்லை. துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரனை அழைக்கவில்லை. டிடிவி.தினகரன் அணியின் 21 எம்.எல்.ஏ.க்களும், சில மாவட்டச் செயலாளர்களும் இதில் கலந்துகொள்ளவில்லை.

இதற்கிடையே பொதுக்குழுவுக்கு முன் தினமான செப்டம்பர் 11-ம் தேதி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம், இந்தப் பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டவை என தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் திட்டமிட்டபடி, இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவை பொதுச்செயலாளராக முந்தைய பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்தனர். சசிகலா மேற்கொண்ட நியமனங்கள் செல்லாது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரன் மதுரையில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது..

‘அதிமுக அம்மா அணியின் பொதுக்குழுவைக் கூட்டுவது என்றால் பொதுச்செயலாளரோ, அல்லது அவரது பிரதிநிதியான துணைப் பொதுச்செயலாளரோதான் கூட்டவேண்டும். அல்லது 500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, பொதுச்செயலாளர் அனுமதியுடன் கூட்ட வேண்டும். அந்த நடைமுறை பின்பற்றாததால் இந்தப் பொதுக்குழு செல்லாது.

தவிர, இதில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது. எனவே இது பொதுக்குழு அல்ல, ஒரு கூட்டம்! இதில் எடுக்கும் எந்த முடிவுகளும் செல்லுபடியாகாது. எனவே இதைப்பற்றி நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நான் போகிற இடங்களில் எல்லாம் மக்களும் கட்சித் தொண்டர்களும், ‘தங்களை பதவியில் உட்கார வைத்த பொதுச்செயலாளருக்கே விசுவாசமாக இல்லாத இவர்கள், மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்கள்?’ என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள். எனவே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன்.

கட்சியில் அம்மா அமர்ந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரையும் அமரவைக்க தொண்டர்கள் விரும்பவில்லை என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவர்கள்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்து பொறுப்பேற்க வைத்தார்கள். கட்சிப் பதவியில் அம்மா இடத்தில் யாரையும் உட்கார வைக்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றால், அம்மா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் இபிஎஸ்.ஸையும் ஓபிஎஸ்.ஸையும் அமர வைக்க மக்கள் விரும்புகிறார்களா?

அதையும் யாரும் விரும்பவில்லை. அதை நிறைவேற்றும் கடமை எனக்கு இருக்கிறது. இது அம்மா ஆட்சி அல்ல. பழனிசாமி அன் கோ நடத்தும் ஆட்சி! துரோகமும் துரோகமும் இங்கு இணைந்திருக்கிறார்கள். இவர்களை மக்கள் ஏற்கவில்லை என்பதற்கு உதாரணம், அன்பு மகள் அனிதா இல்லத்திற்கு இவர்களால் போக முடியவில்லை என்பதுதான்.

நானும் அந்தக் கட்சிக்காரன் என்றாலும் அங்கே போனேன். அப்போது எனக்கு எதிராக ஒரு தரப்பினர் கோஷம் போட்டதை அறிவீர்கள். ஆனால் பிறகு அவர்களே, ‘இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்று கோஷம் போட்டனர். இந்த ஆட்சி வீட்டுக்கு போகணும் என்பதை அன்றே நான் புரிந்து கொண்டேன். இந்த ஆட்சி வீட்டுக்கு போனதும், இப்போ பொதுக்குழுவில் இருக்கிற நிர்வாகிகளும் எங்களுடன் வருவார்கள். தேர்தல் களத்தில் திமுக.வுக்கும் எங்களுக்குமே போட்டி. அதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இந்த ஆட்சிக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பது ஊரறிந்த செய்தி. 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருந்தால், அதை நிரூபிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உண்டு. அல்லது, நிரூபிக்க சொல்லவேண்டிய கடமை கவர்னருக்கு இருக்கிறது. அவர் தாமதிப்பதால் கவர்னர் பதவி மீதான மரியாதை தமிழகத்தில் குறைகிறது. ஆனாலும் நாங்கள் சந்தித்தபோது, ‘அவகாசம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றுதான் கவர்னர் கூறினார்.

பழனிச்சாமி அன் கோ-வுக்கு நான் சொல்வது, இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை. மக்களும் உங்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே ஆட்சியை கலைத்துவிட்டு வாருங்கள். தேர்தலை சந்திப்போம். மக்களிடம் யாருக்கு ஆதரவு இருக்கிறது? என்பதை பார்த்துவிடுவோம்.’ இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.

 

V K Sasikala Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment