அதிமுக ஆட்சியின் போது அரசின் நல்லாட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த ஐடி விங்கின் சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுகளையும் அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டுசேர்த்தவர்கள் அதிமுகவின் ஐடி விங்.
ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகங்களின் வருகை தொடங்கிய காலகட்டத்தின் அதன் தாக்கத்தைப் புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் பரப்புவதற்கு மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டுமெ ந்ற நோக்கத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தகவல் தொழில்நுட்ப பிரிவை தொடங்கினார்கள். அப்படி தமிழ்நாட்டில், பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவுக்கும் ஐடி விங் உருவாக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா ஆரம்பத்திலேயே அதிமுகவில் ஐடி விங் தொடங்கினார். சமூக ஊடகங்களில் அதிமுக ஐடி விங் தொடர்ந்து வீரியத்துடன் செயல்பட்டு வருகிறது.
அதிகவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின்போது அதிமுக அரசின் நல்ல விஷயங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அரசின் நற்பெயரை உருவாக்கியதில் அதிமுகவின் ‘ஐடி விங்’குக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்றால் அது மிகையல்ல. அத்தகைய, பலமான அதிமுக ஐடி விங்கின் சென்னை மண்டல பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர்தான் அஸ்பயர் சுவாமிநாதன்.
அதிமுகவில் ஆரம்பத்தில், அக்கட்சியின் தகவல்தொடர்பு தொழில்நுட்ப பிரிவு அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அஸ்பயர் சாமிநாதன். ஆனால், 2016ம் ஆண்டு ஜெயலலிதா அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு சிங்கை ராமச்சந்திரனை நியமித்தார். சமூக ஊடகங்களில் அதிமுக மீதான விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து செயல்பட்டு வந்தவர் அஸ்பயர் சுவாமிநாதன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மீண்டும் அவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) அணியில் சென்னை மண்டல பொறுப்பாளராக நியமிகப்பட்டு செயல்பட்டு வந்தார். இவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக அறியப்படுகிறார்.
இந்த சூழ்நிலையில்தான், அதிமுக ஐடி விங் சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் நேற்று (ஜூன் 16) கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அஸ்பயர் சுவாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “அதிமுகவில், நல்ல தொழில்முறையாளர்கள் மற்றும் திறமையாளர்களுக்கு இனியும் மதிப்பு இல்லை. எதிர் காலம் குறித்து சிந்தனை, எதை நோக்கி போகிறோம் என்ற இலக்கு எதுவுமே இல்லாமல் கட்சி இருப்பது இன்னும் மோசம். என்னை கட்சி பதவியிலிருந்து நீக்கிவிடுமாறு, கடந்த வாரமே, தலைமைக்கு சொல்லிவிட்டேன். இப்போது நான், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிடுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தனது பிடியை மேலும் இறுக்கமாக்கி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி மட்டுமே அளிக்கப்பட்டது. கொறடா உள்ளிட்ட மற்ற பதவிகள் எல்லாம் இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கே அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.