அதிமுக என்றால் நினைவுக்கு வருவது ஜெயலலிதா தான், என்ற அளவிற்கு கட்சியை கட்டுக் கோப்புடன் நடத்தி வந்தார் ஜெயலலிதா. அப்போது, தமிழக அரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்து வந்தது.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுக-வின் அப்படியே தலைகீழானது. தற்போது, எம்.பி-க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் ஆளுக்காளுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவையடுத்து, முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்க, பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க இப்படி அடுத்ததடுத்த சம்வங்கள் நடந்தன. அதிமுக இனி பிளவு பட்டுவிடும் என சொல்லப்பட்டு வந்தது.
அதை உறுதிபடுத்தும் வகையில் நிகழ்ந்ததுதான் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா செய்த விவகாரம். அதிமுக, ஓ. பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு என இரண்டாக பிரிந்தது. இதன் பின்னர் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு கண்ட சசிகலாவுக்கு, உச்ச நிதிமன்றம் ‘செக்’ வைத்தது . சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இரு அணிகளையும் இணைத்து அதிமுக-வை பலப்படுத்த வேண்டும் என நினைத்து பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்தனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்படுவதோ, இரு அணிகளும் இணையும் என்பது தான். இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
சில மாதங்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். முன்னதாக, இரு அணிகள் இணைவதற்காக கட்சியில் இருந்து ஒதுங்குவதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதிபட தெரிவித்தார். பொதுச்செயலாளர் கட்சிப் பணி ஆற்ற முடியாததால், துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சிப் பணியை ஆற்ற வேண்டும் என்பது எனது கடமை. எனவே, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அதிமுக தலைமை கழகத்திற்கு வந்து கட்சிப் பணியாற்றுவேன். அப்போது, அனைத்து விஷயங்கள் குறித்தும் தெரிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்,
ஆனால், நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து தான் தேர்ந்தெடுத்தோம். மாறாக வேறு யாரும் அவரை தேர்ந்தெடுக்க வில்லை என்று சசிகலாவை மறைமுகமாக விமர்சித்தார்.
சிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரனை 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சந்தித்தனர். ஆனால், அது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும், நட்பு ரீதியிலான சந்திப்பு என்றே அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், அது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்களே என்று கூறப்பட்டது.
டிடிவி தினகரன் விதித்துள்ள கெடு, நாளையுடன் முடிவடைவதால் இரு அணிகளும் இணையுமா, இணையாதா என்று பெரும் குழப்பமே நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறும்போது: அதிமுக அணிகள் இணைவது குறித்து எங்கள் பதிலை நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இணைவது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. அவர்களாகவே ஏதேனும் சொல்லிக் கொள்கின்றனர். ஊழல் அரசுக்கு துணைபோது என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று மைத்ரேயன் தெரிவித்ததார். அது தமிழக மக்களின் கருத்து தான் என்று கூறினார்.
இவ்வாறு அதிமுக 3 அணிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரன் வர இருப்பது மிக முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.