ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள செய்தியின் படி, செம்மரம் கடத்தல் புகாரில் கைதான மாடலிங் அழகியும், விமானப் பணிப்பெண்ணுமான சங்கீதா கொடுத்த தகவலின் பேரில், தமிழ்நாடு உள்பட மூன்று மாநிலங்களை சேர்ந்த முக்கியப் புள்ளிகளை ஆந்திர போலீஸார் குறி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கீதா சாட்டர்ஜி திருமணமானவர். செம்மரக் கடத்தல் விவகாரத்தையும் ஏதோ ஒரு தரமான வணிகம் என கருதி, அதில் சங்கீதா தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் வடமாவட்ட கூலித் தொழிலாளிகள் எல்லாம் ஆந்திர போலீசாரால் சுடப்பட்டு செத்துக் கொண்டிருக்க, சங்கீதா மட்டும் போலீஸில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்திருக்கிறார். சங்கீதாவை போலீஸ் தேடிச் செல்லும் போதெல்லாம் அவருக்கு தகவல் முன்னரே போய்ச் சேர்ந்திருக்கும். உடனே சங்கீதாவும் தப்பித்துவிடுவார்.
பல ஆண்டுகளாக இப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த சங்கீதா, கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் போலீஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். கொல்கத்தாவில் வைத்து சித்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
செம்மரக் கட்டைகளைக் கடத்தி விற்பதில் அதிக ஞானம் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த லட்சுமணனைத் தன்னுடைய கடத்தல் தொழிலுக்காகவே சங்கீதா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என ஆந்திர போலீஸார் கூறுகின்றனர்.
இதையடுத்து சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீதா, போலீஸ் விசாரணையின் போது, 'எனக்கு ஒன்றுமே தெரியாது' என்று மட்டுமே கூறி வந்திருக்கிறார். போலீஸாரின் அடுத்தக்கட்ட விசாரணை சற்று இறுகவே, உண்மையை கூற ஆரம்பித்திருக்கிறார்.
அப்போது, "தமிழ்நாடு, கர்நாடகா, கொல்கத்தாவில் எனக்கு ஆட்களைத் தெரியும். அவர்களிடம் ஆர்டர் பெற்று, சொன்ன இடங்களுக்கு கட்டைகளை அனுப்பிவைப்போம். எனக்கு அந்த ஆட்களை தெரியும், அவர்களின் இடத்தையும், என்ற சங்கீதாவின் வாக்குமூலத்தை அடுத்து, விசாரணையை முடுக்கிவிட ஃபிளைட் ஏறியுள்ளது ஆந்திர போலீஸ்.