உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக முகூர்த்த கால் நடும் விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் சிறப்பாக மாடு பிடிக்கும் வீரருக்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
"அலங்காநல்லூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை காலை 8- மணிக்கு முதல்வரும், துணைமுதல்வரும் கொடி அசைத்து துவக்கி வைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
கோவிட் -19 தொற்றில் இருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடாக மைதானங்கள் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பார்வையாளர்களின் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு அவர்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப் பட்டு வருகின்றது.
சனிக்கிழமை (ஜனவரி 9-ம் தேதி) ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நடை பெற்றது. அதில் அவனியாபுரத்தில் இருந்து 430 காளைகளும் , பாலமேட்டில் இருந்து 655 காளைகளும் அலங்காநல்லூரில் இருந்து 655 காளைகளும் மருத்துவ ரீதியாக தகுதி பெற்றுள்ளன" என்று தெரிவித்தார்.
" அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்களுக்கான ஆர்டி-பிசிஆர் சோதனைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை தொடர உள்ளது. அவர்களுக்கான முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். பாலமேட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஜனவரி 11 மற்றும் 12- ம் தேதிகளிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஜனவரி 12 மற்றும் 13 - ம் தேதிகளிலும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் நடத்த படும்" என்று நகர சுகாதார அலுவலர் பி.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 14 -ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 15 -ம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் டி.அன்பலகன், மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மணிகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"