மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
1986-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியால் நேருவின் நூற்றாண்டு விழாவில் தொடங்கப்பட்ட இத்தகைய ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலும், நிதியுதவியிலும் செயல்பட்டு வருகின்றன. முதன்முதலாக மஹராஷ்டிரா மாநிலம் அம்ராவதியில் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ. அமைப்புடன் இணைந்து செயல்படும் நவோதயா பள்ளிகளில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களிடம் ஆண்டு கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலமாகவே இத்தகைய நவோதயா பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாட்டில் 1930-களில் தமிழ்நாட்டில் துவங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் தாக்கத்தால், இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நவோதயா பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் 32 நவோதயா பள்ளிகளை துவங்க மத்திய அரசு அனுமதியளித்தது. அதற்கு தமிழக அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம், நவோதயா பள்ளிகளை அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவோதயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இருமொழி பாடத்திட்டம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனால், இந்தி மொழி நவோதயா பள்ளிகள் மூலம் மறைமுகமாக திணிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இப்பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் இல்லை எனவும், அதனால் தமிழகத்தில் இப்பள்ளிகளை துவங்க தடையேதும் இருக்காது எனவும் சமீபத்தில் நவோதயா வித்யாலயா சமிதி விளக்கமளித்திருந்தது.
நவோதயா பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கீடு, தமிழ்மொழி பாடத்திட்ட கொள்கை குறித்து ஆலோசனை நடத்தியபின், நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அவ்வாறு அனுமதியளிக்கும் நிலையில், 32 மாவட்டங்களிலும் இப்பள்ளிகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை விரைவில் கூடி, நவோதயா பள்ளிகள் சி.பி.எஸ்.இ. கீழ் இயங்கும் வகையில் ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நவோதயா பள்ளிகள் உள்ள நிலையில், இந்தி மொழி எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளிகூட அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.