தமிழில் மருத்துவக் கல்வி தொடங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தியா சிமெண்ட்ஸ் பவள விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (நவ.12) நடைபெற்றது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமித் ஷா, “உலகின் மிகப் பழைமையான மொழி தமிழ்” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ் உலகின் மூத்த மொழி. தமிழால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே பெருமை” என்றார்.
மேலும் தமிழில் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்பு கல்விகள் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “தமிழில் மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வியை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்காக தமிழில் உரிய பாடத்திட்டங்களை அமைக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும், தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, மருத்துவம் மட்டுமின்றி பொறியியல் (என்ஜினீயரிங்) படிப்புகளும் ஆங்கிலத்தில் இருப்பதால் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறிய அமித் ஷா, தமிழ்நாட்டின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வருகிறார் என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil