நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்த அறிக்கை மனித உரிமைகள் ஆணையத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து வந்தார். அவரது உழைப்புக்கு ஏற்றார்போல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராடிய அனிதா, நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விரக்தியடைந்துள்ளதாக தெரிகிறது.
கடும் மன உளைச்சலில் இருந்த அனிதா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் இந்த தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அனிதாவின் தற்கொலை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மத்திய மண்டல அளவில் காவல்துறை அலுவலர்கள், போலீசாருக்கான குறைகேட்பு முகாம் நேற்று நடந்தது. இதில் டிஜிபி ராஜேந்திரன் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார். இடமாற்றம், ஊதிய முரண்பாடு, தண்டனை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 478 பேர் மனு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழக போலீசார், குறைகளை தெரிவிக்க, சென்னைக்கு வரும் நிலை இருந்தது. அதை தவிர்க்கும் விதமாக, மண்டல அளவில், குறைதீர் முகாம் நடத்தி, போலீசாரின் குறைகள் கேட்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக காவல் பணியில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நடைமுறைகள் இன்னும் 2 மாதங்களில் முடியும். அடுத்து காவல்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் விரைவில் வரும் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, மாணவி அனிதா தற்கொலை செய்தது குறித்து, மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. மனித உரிமை ஆணையத்திடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.