மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த நடிகை கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து அனுப்பி விட்டு தங்களது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அனிதா மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும். நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட சென்றனர். அப்போது நடிகை கஸ்தூரி அங்கு வந்தார். ஆனால், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மே 17 இயக்கத்தினர், நடிகை கஸ்தூரியை அங்கிருந்து வெளியேற்றி விட்டு தங்களது முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
பாஜக அலுவலகத்தை நோக்கி சென்ற மே 17 இயக்கத்தினரை அலுவலகத்துக்கு சுமார் 500 மீட்டர் தொலைவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, "எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது" என அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.