நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா தற்கொலை செய்து கொண்டு இன்று உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது. அனிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற அம்மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆறுதல் கூறினர். தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனிதாவின் தற்கொலைக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, அனிதாவின் தற்கொலையால் கடும் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், சென்னை, மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், செந்துறை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதேசமயம், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக கோரியும், பிரதமர் மோடியை கண்டித்தும் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் மன்றதினரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், அனிதாவின் தற்கொலையையடுத்து, சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.