மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்லூரி மாணவர்கள் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அனிதா தற்கொலை செய்து கொண்ட தினமே மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டும், முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஆறாவது நாளாக கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள், நியூ கல்லூரி மாணவர்கள் என பல்வேறு கல்லூரி மாணவர்கள் அறவழியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் திருச்சியில் கி.ஆ.பே,விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி அருகே, மாணவர் பெருமன்றம் சார்பில் 6-வது நாளாக தூக்கு மாட்டி கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் அரசு ஆண்கள் கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்லூரியில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வு ரத்து மற்றும் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது, அங்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். இதேபோல் அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெரினா சர்வீஸ் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறை போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.