/indian-express-tamil/media/media_files/2025/01/22/IE5tHmMHGjWaaMRHCZrg.jpg)
Anna University
அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜெ. பிரகாஷ், இணைப்பு இயக்குநர் வி.ஆர். கிரி தேவ் உட்பட மேலும் பல அதிகாரிகளை அவர்களின் பொறுப்புகளில் இருந்து விடுவித்து பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு (Syndicate) நேற்று (சனிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
போலி ஆசிரியர்கள் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC), முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் மற்றும் பதிவாளர் பிரகாஷ் உட்பட 11 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், ஓய்வுபெற்ற முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜின் பணி இடைநீக்கத்தை ஆளுநர் ஆர்.என். ரவி ரத்து செய்ததையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஆட்சிமன்றக் குழு சனிக்கிழமை கூடியது.
பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது:
"லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைத்து அதிகாரிகளையும், அவர்கள் வகித்து வந்த கூடுதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்க ஆட்சிமன்றக் குழு முடிவெடுத்தது. இதற்கான உத்தரவுகள் சனிக்கிழமை மாலையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது."
புதிய பதிவாளரை நியமிக்கும் பணியில் உயர் கல்வித்துறை ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் - சிண்டிகேட் மோதல்
போலி ஆசிரியர்கள் விவகாரத்தில், முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் மீது விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து, அவர் பேராசிரியராகப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற நாளில், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு அவரைப் பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், ஆட்சிமன்றக் குழுவின் இந்த முடிவுக்கு எதிராக வேல்ராஜ் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி அவரது பணி இடைநீக்க உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி ரத்து செய்தார்.
இதன் பின்னணியிலேயே, இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் பொறுப்பிலிருந்து விடுவிக்கும் முடிவை சிண்டிகேட் எடுத்துள்ளது.
போலி ஆசிரியர்கள் மோசடி: பின்னணி
கடந்த ஆண்டு ஜூலை மாதம், அறப்போர் இயக்கம் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், 2023-24 கல்வியாண்டில் 353 நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவதாகப் போலிக் கணக்கு காட்டப்பட்டதை வெளிப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, அப்போதைய தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி. ஆபிரகாம் தலைமையில் மாநில அரசு ஒரு மூவர் குழுவை அமைத்து விசாரித்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உள் விசாரணையிலும், 2024-25 கல்வியாண்டுக்கான சுமார் 2,000 ஆசிரியர் பணியிடங்கள் போலியான நியமனங்களால் நிரப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பணிபுரிவதாகக் காட்டப்பட்டிருந்தனர்.
இந்தப் பெரிய மோசடியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஈடுபட்டிருந்தாலும், அரசு அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பேராசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஜெ. பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், போலி ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த இணைப்பு வழங்கும் நடைமுறையை காணொலியில் பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், இந்த ஆண்டு அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகம் நேரடி ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us