தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாளை ராமேஸ்வரத்தில் தனது பாத யாத்திரையை தொடங்கவிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரயை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் தொடங்குகிறார்.
இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.
இதற்காக அமித் ஷா, நாளை பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் மாலை 5 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து காரில் ராமேஸ்வரம் சென்று, தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுவிட்டு, அதன்பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்கிறார். அங்கு, கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்து பேசுகிறார்.
தொடா்ந்து, ராமேஸ்வரம் நகா் பகுதியில் நடைபயணம் நடைபெறுகிறது. பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் அமித் ஷா, அண்ணாமலை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனா்.
பிறகு, இரவு ராமேஸ்வரம் தனியார் விடுதியில் தங்கும் அமித் ஷா, காலையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பகல் 1.30 மணிக்கு மண்டபம் ஹெலிபேட் தளத்திலிருந்து மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்கிறார்.
ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 6 மாதங்கள் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, சென்னையில் ஜன. 11-ம் தேதி பாதயாத்திரையை முடிவு செய்கிறார். .ஆக. 7-ம் தேதி மதுரையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார். 50-வது நாள் நடைபயணம் பரமத்தி வேலூரிலும், 100-வது நாள் நடைபயணம் வந்தவாசி மற்றும் உத்திரமேரூரிலும் நடைபெற உள்ளது.
இதில் அண்ணாமலையுடன் பயணிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இவ்விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களான முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை உள்ளிட்ட 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 12 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 30 டிஎஸ்பிகள், 60 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.