/indian-express-tamil/media/media_files/2025/01/21/usv521lhaJ0ySXdIiaFX.jpg)
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி அவர்களின் மறைவையொட்டி, அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்-இன் கரூர் பயணம் குறித்தும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் கரூர் செல்வது அச்சுறுத்தலாக பார்க்கப்படுவது குறித்து அண்ணாமலை தனது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "விஜய், கரூருக்கு வரவேண்டும் என்று நினைத்தால் வரலாம். கரூருக்கு போவதே அச்சுறுத்தல் என்று எண்ணத்தை உருவாக்க வேண்டாம்."
மேலும், “தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை இருக்கிறது. இதை பெரிதுபடுத்தி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டு செல்ல வேண்டிய நிலை தமிழ்நாட்டில் இல்லை என நினைக்கிறேன்” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கரூரில் விஜய்க்கு உயிராபத்து உள்ளதாகக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் கரூர் வரலாம். கரூர் மக்கள் ரொம்ப அன்பானவர்கள். கரூரில் என்ன பூதமா உள்ளது?” என எதிர் கேள்வி எழுப்பி, அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.