ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றும் திமுகவை விமர்சிப்பது கூட தவறான முன் உதாரணமாக மாறிவிடும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “ ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். திமுகவை விமர்சித்தால் கூட அது தவறான முன் உதாரணமாக பார்க்கப்படும். ராஜ்பவனில் நடைபெற்ற பல்கலைக்கழ துணைவேந்தர்களின் கூட்டத்தில், பல்கலைக்கழத்தில் உள்ள பணி நியமனங்கள் தொடர்பாக ஆளுநர் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற விஷயங்களில் சரியான இடங்களில் ஆளுநர் பேச வேண்டும்.
ஆளுநர் திமுகவை விமர்சிக்க வேண்டும் என்றால், அது சட்டமன்றம் நடைபெறும்போது, அங்கு இதை முன்வைக்க வேண்டும். எதிர்கட்சிகளைப் போல் ஆளுநர், மாநில அரசை விமர்சிக்கக்கூடாது. அரசு செயல்பாடுகளை தினசரி விமர்சித்தால் ஆளுநரின் மதிப்பு குறைந்துவிடும். ஆளுநர் ஊடகத்தை சந்தித்தால், அதில் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாகத்தான் இருக்கும். அவர் திமுகவின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவார். ஆனால் அவர் ஊடகத்தை சந்திக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்து. பொதுவாக 6 மாதங்கள் அல்லது வருடத்தில் ஒரு முறை மட்டுமே ஆளுநர்கள், பத்திரிக்கைக்கு பேட்டி வழங்குவர்.
தினமும் நடக்கும் பிரச்சனைகளை ஆளுநர் பேசத் தொடங்கினால், மாநில அரசு அவரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளுமா? திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர்களுக்கு இது ஏன் புரியவில்லை என்று தெரியவில்லை’ என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil