கோயிலுக்குள் நுழையவிடாமல் ஜாதி சுவர்

இந்த புகார் குறித்து, விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே தெரிவித்தார்.

கோயிலுக்குள் நுழையவிடாமல் ஜாதி சுவர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரு சமூகத்தினரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக அவர்களின் வசிப்பிடத்திற்கும் கோவிலுக்கும் இடையே மற்றொரு சமூகத்தினர் சுவர் எழுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஹரிஹரபாக்கத்தில் உள்ள ஒரு சமுதாயத்தினர் அங்குள்ள நூற்றாண்டு கால பழமையான அருள்மிகு துளுக்கநாதம்மன் கோவிலில் நுழையவிடாமல் நமண்டி காலணியில் உள்ள ஒரு சமூகத்தினரை தடுப்பதாக புகார் கூறப்படுகிறது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 27, 2016-ஆம் ஆண்டு நமண்டி காலணியில் உள்ள இளைஞர்கள், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தை அணுகி, தங்களை அந்த கோவிலுக்குள் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளாக குறிப்பிட்ட அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை மற்றொரு சமுதாயத்தினர் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, பலகட்ட வலியுறுத்தல்களுக்குப் பிறகு, கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி வருவாய் துறை அதிகாரிகள் நமண்டி காலணியை சேர்ந்த 50-60 பேரை கோவிலுக்குள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அன்றைய தினமே இதனால் ஏற்பட்ட சட்ட-ஒழுங்கு பிரச்சனையால் அந்த கோவிலை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதன்பிறகு, ஹரிஹரபாக்கத்தை சேர்ந்த மக்கள், மற்றொரு சமூகத்தினரை கோவிலில் நுழையவிடாமல் ஏற்படுத்தப்பட்ட தடையை விலக்கிக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து, கோவில் மீண்டும் திறாக்கப்பட்டது. கோவிலை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகும் குறிப்பிட்ட சமுதாயத்தினரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்களும் ஹரிஹரபாக்கம் மக்களுக்கே ஆதரவளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நமன்டி காலணி மக்களை கோவிலில் நுழையவிடாமல் தடுப்பதற்காக கோவிலின் ஒரு புறத்திலிருந்து ஹரிஹரப்பாக்கம் கிராமத்தினர் சுவர் எழுப்புவதாக புகார் எழுந்துள்ளது. அதற்காக சுற்றுச்சுவர் எழுப்ப கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டப்பட்டதாகவும், இதற்காக நிதியுதவிக்கு ஹரிஹரபாக்கம் மக்கள் அனைவரும் பணம் தர ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த செய்தியை ஹரிஹரப்பாக்கம் மக்கள் மறுத்துள்ளனர். மேலும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியின்றி கோவிலில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிலின் முன்பு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரேவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “துளுக்கநாதம்மன் கோவிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் சென்று வருகின்றனர். அதுகுறித்து எவ்வித பிரச்சனையும் இல்லை”, என கூறினார். மேலும், குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலில் நுழையவிடாமல் தடுப்பதற்கு கோவிலில் சுவர் எழுப்புவதாக புகார் எழுந்திருப்பது குறித்து, சரிபார்த்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே பார்வையிட்டபோது

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Another caste wall to keep dalits from temple

Exit mobile version