நடிகை நயன்தாராவின் ‘அறம்’, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்டையடி கொடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அறம்’ திரைப்படத்தை அதன் இயக்குனர் கோபி நயினாருடன் சென்று சென்னை சத்யம் தியேட்டரில் பார்த்தார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். பிறகு திரைப்படம் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியது:
அனைவருக்கும் புத்தி சொல்லுகிற அருமையான திரைப்படம். இது அறம் உள்ளவர்களால் ஆய்வுசெய்யப்படுமானால், சர்வதேச அளவில் விருதுகள் பெறுகிற படம். சமூக அக்கறை, மனித நேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கிறது.
நடிகர் விவேக் கருத்து
ராக்கெட் விட வேண்டும், இந்த நாட்டை வல்லரசாக்க வேண்டும் என்று துடிக்கிற ஆட்சியாளர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் விழுகிற குழந்தைகளைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. மனிதநேயம் உள்ள ஜனநாயக சக்திகள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் இந்தப் படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறவர்கள் அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பட்டு இருக்க முடியாது என்பதை நயன்தாரா உணர்த்துகிறார். தான் மக்களுக்கு சேவை செய்ய கனவுகளோடு வந்தேன். ஆனால், அரசியல்வாதிகளின் கெடுபிடிக்குள் பணிசெய்யமுடியாத நெருக்கடிகளை சந்தித்தேன், அடிமைக்கு அடிமையாக வேலை செய்ய விரும்பவில்லை என்று பதவியை உதறி எறிகிறார்.
இவ்வாறு நறுக்கு தெரித்தாற்போல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. சமூக அக்கறையை ஊட்டும் 'அறம்' மிகச்சிறந்த ஒரு படம். இயக்குநருக்கும் படத்தை துணிந்து தயாரித்த ராஜேஷ்-க்கும் வாழ்த்துகள். குத்தாட்டம், சண்டை, காதல் காட்சிகள் என வணிக நோக்கில் எந்தக் காட்சியும் அமைக்கப்படாமல் அனைவரையும் கவரும் படம் 'அறம்'. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.