/indian-express-tamil/media/media_files/2025/10/09/armstrong-murder-case-rowdy-nagendran-death-2025-10-09-12-50-10.jpg)
Armstrong Murder Case Rowdy Nagendran Death Armstrong A1 Accused Death
சென்னை: கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை, பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், A1 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த பிரபல ரவுடி நாகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உயிரிழந்தார்.
பின்னணி: ஆம்ஸ்ட்ராங் படுகொலை
கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி, ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கும்பலாக வந்து அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். நிலத் தகராறு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட முன்விரோதங்களே இந்தக் கொலைக்குக் காரணம் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, முக்கியக் குற்றவாளியான நாகேந்திரன் (எ) வியாசர்பாடி நாகேந்திரன், பொன்னைப் பாலு உட்பட 27 பேரை கைது செய்தனர். மேலும் இருவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு மாறிய வழக்கு
ஓராண்டிற்கும் மேலாக தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ரவுடி நாகேந்திரன் மரணம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நாகேந்திரன், ஏற்கெனவே வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர். இவர் மீது 5 கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடசென்னையின் 'தாதா' என்று அழைக்கப்பட்ட நாகேந்திரனுக்குப் பல ஆண்டுகளாகவே கல்லீரல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
சிறையில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பலனின்றி, ரவுடி நாகேந்திரன் இன்று காலை (அக்டோபர் 9, 2025) 10.30 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவரது உடல் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, விரைவில் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி உயிரிழந்திருப்பது இவ்வழக்கின் போக்கில் மேலும் சில திருப்பங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us