/tamil-ie/media/media_files/uploads/2017/07/Government-bus.jpg)
வை-பை, சிசிடிவி கேமிரா, பணமில்லா பரிவர்த்தனை என்பன உள்ளிட்ட பல வசதிகள் அரசு பேருந்துகளில் ஏற்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதற்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளித்து பேசினார். அப்போது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். இதனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகை முற்றிலும் தவிர்க்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் படிப்படியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இனி இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.