தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததே தீக்குளிப்பு சம்பவங்களுக்கு காரணம் என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தீக்குளித்தனர். இதில், ஒரு பெண்ணும் அவரின் இரண்டு குழந்தைகளும் பலியாக, அப்பெண்ணின் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், கந்துவட்டியின் கொடுமையால் அவர்கள் இம்முடிவு எடுத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் இவ்விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, "பகுத்தறிவு எனும் பெயரில் பெரியாரின் ஆதரவாளர்கள் தமிழகத்தை சீர்குலைத்து விட்டார்கள். தமிழகத்தில் ஆன்மிக நம்பிக்கை குறைந்ததால், தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது. பகுத்தறிவு என்று கூறி அடிப்படை அறிவு மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. ஈ.வெ.ரா. ஆட்கள் தமிழகத்தை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள் என்பதற்கு தீக்குளிப்பு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. நாத்திகத்தை அடியோடு விரட்டியடித்தால் தான் தீக்குளிப்பு சம்பவங்கள் குறையும்.
தமிழகத்தில் மட்டும் தான் இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் தீக்குளிப்பதில்லை. திராவிடக் கட்சிகளின் அஸ்தமனத்தில் தான் தமிழகத்துக்கு விடியல்" என்றார்.
ஏற்கனவே, 'மெர்சல்' விவகாரத்தில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை சம்பாதித்துவருகிறார் ஹெச்.ராஜா. இப்போது, தீக்குளிப்பு சம்பவத்திற்கு ஆன்மிக நம்பிக்கை குறைவே காரணம் என கூறியிருக்கிறார். இந்த நிலையில், வடபழனி லோகையா காலனியில் உள்ள ஹெச்.ராஜாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.