கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நாலு ரோடு சந்திப்பு மைதானத்தில் பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்று வருவதாகவும், குறிப்பாக விவசாயிகளுக்கு விரோதமாக திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது; 'தமிழகம் ஆன்மிக பூமி. தமிழகம் பழமையான மொழி, கலாச்சாரம் கொண்ட நிலம். இப்பகுதி இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை இக்கூட்டம் ஏற்படுத்தும். மோடி தலைமையிலான இந்தியா முன்னேறி வருகிறது. கொரோனா, உக்ரைன் போருக்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகளுக்கு அதிகாரம் இந்த கட்சியிலும், ஆட்சியிலும் வழங்கப்பட்டு வருகிறது. 80 கோடி மக்கள் பயனளிக்கும் உணவு, தானியங்கள் திட்டம் மூலம் ஏழை மக்கள் பசியாறி கொண்டிருக்கிறார்கள்
11 கோடி மக்களுக்கு 5 இலட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
மோடி அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடி சமுகத்தை சேர்ந்தவர்களை குடியரசு தலைவராக்கியுள்ளது. பட்டியலினம் மற்றும் பழங்குடியை சேர்ந்த பலர் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் அதிகளவிலான மருத்துவ கல்லூரிகளை பெற்றுள்ளது. விவசாயிகள் வங்கி கணக்கில் 4 மாதத்திற்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. பயிர் பாதுகாப்பு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு இலட்சம் கோடி ரூபாயை விவசாய துறைக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 220 கோடி தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 9 மாதத்தில் 2 தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கியது. 100 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளோம். 44 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியுள்ளோம். பிரதமர் மோடி முயற்சியால் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.
11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்துள்ளது. நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் மாநிலம் பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி.
திமுக என்பதற்கு வாரிசு அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பது தான் விளக்கம். திமுக மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை.
நமக்கு நாடு தான் முக்கியம். ஆனால் திமுகவினர் கொள்ளையடிக்க கட்சி நடத்துகிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள். திமுகவில் சுயநலன் தான் முதலில் இருக்கும். பிறகு கட்சி, கடைசியாக நாடு என இருக்கிறது.
ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என நாட்டை பிளவுப்படுத்துவர்களுடன் நடந்து கொண்டிருக்கிறார். நாம் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறோம். அவர்கள் பிரிவினையை தூண்டுகிறார்கள்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி இரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவை முழுமையாக இணைத்துள்ளார். திமுக கருணாநிதி & சன்ஸ்க்கான கட்சி. காங்கிரஸ் காந்தி & சன்ஸ்க்கான கட்சி. அடுத்த முறை நான் வரும் போது நீலகிரியில் தாமரை மலர்ந்திருக்கும்' எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.