/tamil-ie/media/media_files/uploads/2017/08/Bus1.jpg)
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாச வணிக வளாகம் அருகே அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பாரிமுனை நோக்கி, மாநகர அரசுப் பேருந்து 18K சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில், அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் என ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்து ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகம் அருகே காலை 10 மணியளவில் வந்த போது, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது. இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது, அருகே இருந்து வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியது. மேலும், எதிரே வந்த இரு சக்கர வாகனம், சரக்கு வாகனம் உள்ளிட்டவைகளின் மீதும் அப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் எட்டு பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரபரப்பான அண்ணா சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அத்துடன் போக்குவரத்தையும் சீர் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.