ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், நேற்று நடைபெற்ற போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனான இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில், நேற்றே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பணிமனை ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்த அளவே இன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், குறைந்த அளவிலான மாநகர பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில், 36 அரசுப் பணிமனைகளில் மொத்தம் 560 பேருந்துகள் உள்ளன. ஆனால், இந்த வேலை நிறுத்தத்தால், இதில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அதேபோல், தேனியில் உள்ள ஏழு பணிமனைகளில் 434 பேருந்துகள் உள்ளன. அவற்றில் வெறும் 32 பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு. மதுரையில், 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தேனியில் உள்ள ஏழு பணிமனைகளில் 434 பேருந்துகள் உள்ளன. அதில், 32 பேருந்துகள் தற்காலிகப் பணியாளர்களால் இயக்கப்படுகின்றன. மதுரையில் 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கு கழக பணிமனையில் உள்ள 110 பேருந்துகளில், இதுவரை ஒரு பேருந்து கூட இயக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
டிரைவர் தற்கொலை முயற்சி:
இந்நிலையில், விழுப்புரத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஹென்றி என்பவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து பணி செய்ய மேலதிகாரி வற்புறுத்தியதால், அரசுப் போக்குவரத்துப் பணிமனையின் 2-வது மாடியில் இருந்து குதித்து, அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனால், அந்த ஓட்டுனருக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு:
சென்னை அண்ணாநகரில் மாநகர அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. அதேபோல, சென்னை குரோம்பேட்டை, போரூர், ஓட்டேரி, விழுப்புரம், கோபிசெட்டிபாளையம், செய்யாறு போன்ற பகுதிகளில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.