அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் அவர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. மேலும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் அமைச்சராக நீடிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்தபோதும் அவர் எந்த அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் எந்த தகுதியின் அடிப்படையில் அவர் அமைச்சராக நீடிக்கிறார் என்ற விளக்கத்தை கேட்டு சென்னை குளத்தூரில் உள்ள ராம சந்திரன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. “ செந்தில் பாலாஜி அமைச்சராக நீட்டிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறிய ஆளுநர், அவரை நீக்க வேண்டும் என்று எங்கே குறிப்பிட்டிருக்கிறார் என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள். அப்படி எழுதியிருந்தால் அந்த கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உயர் நீதிமன்றம், முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது என மறுத்து விட்டது. அ.தி.மு.க முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் மனுவையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil