கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏப்ரல் 2 முதல் நான்கு கட்டங்களாக நடக்கிறது.
வேலூர் மாவட்டம், தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வேலூரை சேர்ந்த அசோக் குமார் உள்பட நான்கு பேர் மற்றும் நாகையை சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ஆளுங்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பெறுவதில்லை எனவும், பெற்றாலும் அவற்றை அற்ப காரணங்களை கூறி நிராகரித்து விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மனுக்கள் ஏப்ரல் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.