இரட்டை பதவிகளுடன் வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கு நிறுவப்பட்டுள்ளது. விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழக ஆளுநரான ஆர்.என். ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவர் பதவியில் இருக்கிறார். இரண்டு இடங்களில் பதவி வகிப்பதால், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், "இந்திய அரசியல் சாசனம் 158 (2)படி, ஆளுநராக பதவி ஏற்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரோவில் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, ஆளுநராக நிர்வகிக்கும் பதவிக்கு தகுதி இல்லாதவராக ஆகிறார். எனவே அவரை ஆளுநர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம் என்னவென்றால், "அரசியல் சாசனத்தில் ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என்று சட்டப் பாதுகாப்பு போட்டிருந்தாலும், இது ஆளுநர் என்றவரின் தனிப்பட்ட செயல்பாடுகள் தொடர்பானதாக உள்ளது. ஆகவே, அதன் அடிப்படையில் வழக்கு தொடர முடியும்.
எனவே, ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி இருப்பதால், அவர் ஆளுநர் பதவிக்கு தகுதியுடையவரா என்று விளக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படும் பட்சத்தில், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை ஒத்திவைக்க முடிவுசெய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.