பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், ‘நல்லது செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா?’ என சீற்றத்துடன் கேள்வி எழுப்பினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து, இன்றுடன் (நவம்பர் 8) ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த நடவடிக்கை மாபெரும் தோல்வி என வர்ணித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தி வருகின்றன. அதே சமயம் பாஜக தரப்பில் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் பாஜக வி.ஐ.பி.க்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். சென்னை தி.நகரில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் கிண்டலாக அணுகுகிறது. கருப்புப் பணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சி ஒரு அடிகூட எடுத்து முன்வைக்கவில்லை என்பதை இந்தத் தருணத்தில் கூற விரும்புகிறேன். மத்திய அரசு இதில் திடீர் நடவடிக்கை எடுக்கவில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்க மக்கள் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்க வெளிநாடுகளின் உதவியை பெற்று வருகிறோம். இந்த நடவடிக்கை தொடரும். எதிர்க்கட்சிகளும் எங்களிடன் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், ஜி.எஸ்.டி.யை அமுல்படுத்தவும் கேட்டார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்தபிறகு குறை கூறுகிறார்கள். செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா?’ என கேள்வி விடுத்தார் நிர்மலா சீதாராமன்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டபோது, ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என்றார் அவர். தொடர்ந்து வேறு கேள்விகளை எழுப்பியபோது, ‘இன்று பண மதிப்பிழப்பு தொடர்பான கேள்விகள் மட்டும்தான்’ என முடித்தார் நிர்மலா சீதாராமன். இந்தப் பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உடன் இருந்தார்.