6-ம் தேதி சென்னையில் 46வது சர்வதேச புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள நந்தனம் YMCA மைதனாத்தில் 46-வது புத்தக் கண்காட்சி நான்காவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (Book Sellers and Publishers Association of South India (BAPASI)) சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில், கடந்த ஆண்டை விட 200 அரங்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இந்த கண்காட்சியில், LGBTQIA+ இலக்கியங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை அரங்கம் அமைத்துள்ளது.
அரங்கு 28-இல் அமைக்கப்பட்டிருக்கும் ‘குயர் பப்லிஷிங் ஹவுஸ்’, பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக அரங்கு அமைத்துள்ளனர். இதைப்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் ஆசிரியர் நேகா பேசியதாவது:
“ஒரு போராட்டத்திற்கு பிறகு தான் எங்களுக்கு இந்த 46வது புத்தகக் கண்காட்சியில் இடம் கிடைத்துள்ளது. 45 வருடங்களாக இதுவரை நடந்த புத்தகக் கண்காட்சியில் மூன்றாம் பாலினத்தவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்காக அரங்கு பிரத்யேகமாக அமைக்கப்படவில்லை.
இந்திய முழுவதும் எழுதப்பட்டுள்ள LGBTQIA+ படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தங்களது தடைகளை தகர்த்து சாதித்த திருநங்கைகளின் சுயவரலாற்று புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியில் மூன்று புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம்.
குயர் சமூகத்தில் இருந்து வரும் மக்கள் தங்களது கருத்துக்களை தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இந்த பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. பெரும்பான்மையான மக்கள், எங்களது திறமைகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. சமூகத்தின் அந்த பார்வையை எதிர்த்து எங்கள் போராட்டம் தொடரும்.
இதற்காகவே, இந்த புத்தகக் கண்காட்சியில் #queerwritersarewriters என்னும் ஹேஷ்டேகை அறிமுகம் செய்திருக்கிறோம். இதுவரை குயர் சமூகத்தில் இருந்து பல திறமையான எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எங்களது இம்முயற்சியால் அவர்களுக்கு பாராட்டு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
எங்கு போனாலும் எங்களின் மேல் கேள்வியும் வெறுப்பும் சமூகத்தால் திணிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை எங்கள் அரங்கிற்கு வருகைதந்த மக்கள் பெருமளவு ஆதரவு அளித்துள்ளனர்”, என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil