சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் 250 கோடி ரூபாயில், அடுக்குமாடி வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதில், 2,150 கார்கள் மற்றும் 400 டூ - வீலர்கள் வரை நிறுத்த முடியும். தவிர, உணவு கூடங்கள், வணிக ரீதியிலான ஷோ ரூம்கள் உள்ளன. மேலும், விமான நிலையம் வரும் பயணியர் நேரத்தை செலவிடும் வகையில், திரையரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பி.வி.ஆர் சினிமாஸ் (PVR Cinemas) அமைத்துள்ள திரையரங்குகளில் ஒரே நேரத்தில் 1155 பேர் படம் பார்க்கும் அளவிலான 5 திரைகள் உள்ளன. இந்நிலையில் 'ஏரோ ஹப்' வணிக வளாகத்தில் உள்ள, பி.வி.ஆர்., திரையரங்கை மூடுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் நோட்டீஸ் அளித்தது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தை, ஒலிம்பியா குழுமம் கட்டி உள்ளது. இந்த வளாகத்தை, மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனம் பராமரித்து வருகிறது. உள்நாட்டு முனையத்திற்கு வரும் பயணியரின் கார்களை நிறுத்த, கிழக்கு பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இடம் கிடைப்பதில்லை. தியேட்டருக்கு வருவோரின் கார்கள், வாகன நிறுத்தத்தை நிரப்பி விடுகின்றன. இது தொடர்பாக, விமான நிலையத்திற்கு பயணியர் பலர் புகார் அளித்தனர். மேலும், இதர விமான நிலையங்களில் உள்ள வணிக வளாகத்தில் திரையரங்கு அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ்க்கு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளை தியேட்டருக்குள் விட்டுவிட்டு, எம்.எல்.சி.பி-யின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் எம்எல்சிபியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டது. அதன் பிறகு விமான நிலைய அதிகாரிகள் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடமிருந்து பல புகார்களைப் பெறத் தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து ஏரோ ஹப்பில் இயங்கி வரும் மல்டிபிளக்ஸ் நிறுவனத்தை மூட இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, விமான நிலையத்தில் இயங்கி வரும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்கள் போன்று விமான நிலைய தரத்தை மேம்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் விமான நிலையத்திற்குள் மல்டிபிளக்ஸ் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இப்போது இந்த சூழ்நிலையில் மல்டிபிளக்ஸ் காரணமாக பல பிரச்சனைகள் எழுவதால் இதை மூட இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil