சென்னை ஆவடி பட்டாலியனில் கமாண்டண்ட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மறுநாளே மரணமடைந்துள்ள சம்பவம், அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை ஆவடி இரண்டாவது பட்டாலியனில் கமாண்டண்ட் ஆக இருந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த ஏப்ரல் 30ம் தேதி, பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சுப்பிரமணியன், ஆவடி ஆயுத தொழிற்சாலையை அடுத்த கொல்லுமேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
மே 1ம் தேதி இரவு 11.30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக அவர் கூறிய நிலையில், மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்புடன் இறுதிச்சடங்குகள் எளிமையாக நடைபெற்றன.
ஆவடி இரண்டாவது பட்டாலியனை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கூறியதாவது, சுப்பிரமணியன் தனது பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடந்துவந்தார். பட்டாலியனில் தினமும் காலை நடக்கும் பரேடில் தினமும் தவறாது பங்கேற்பார். பேட்மிடன் விளையாடுவதில் அதீத ஆர்வம் காட்டும் அவர், மற்றவர்களிடம் இனிமையாக பழகுவார் என்று தெரிவித்தார்.
மற்றொரு இன்ஸ்பெக்டர் கூறியதாவது, சுப்பிரமணியன், தனது கடைசி பணிநாளிலேயே மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார். ஓய்வு பெறப்போகிறோம் என்ற எண்ணம் அவரை வருத்தியிருக்க வேண்டும் என்று கூறினார்.
1987ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியை துவக்கிய சுப்பிரமணியன், ஆவடி இரண்டாவது பட்டாலியனில் துணை கமாண்டண்ட் ஆக பணியாற்றி வந்தார். ஓய்வு பெற இருந்ததையொட்டி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கமாண்டண்ட் ஆக பணிநியமனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil