சென்னை புத்தகத் திருவிழாவில் தினமும் கருத்தரங்கம், புத்தக வெளியீடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அந்த வகையில், ‘பெண்களும் அதிகாரமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பாக சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் சென்னை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. எட்டாம் நாளான ஜூலை 28-ம் தேதி ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் ‘பெண்களும் அதிகாரமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ‘அரசியலும் பெண்களும்’ என்ற தலைப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியும், ‘பெண்களும் போராட்டமும்’ என்ற தலைப்பில் கவிதா முரளிதரனும், ‘பெண்களும் குடும்பமும்’ என்ற தலைப்பில் ஜெ.தீபலட்சுமியும் பங்கேற்று பேசினார்கள்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6 மணிக்கு தாய்மொழிச் சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. வீ.அரசு தலைமை ஏற்க, ‘வரலாற்றில் தமிழ்’ என்ற தலைப்பில் சு.வெங்கடேசனும், ‘தாய்மொழிச் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் ஆழி செந்தில்நாதனும், ‘தமிழின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் இயக்குனர் கரு.பழனியப்பனும் உரையாற்றுகிறார்கள். எஸ்.கே.முருகன் வரவேற்று பேசுகிறார். கௌரிசங்கர் நன்றி கூறுகிறார்.
தினமும் ஏராளமான புத்தகப் பிரியர்கள் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.