மனிதர்களுக்கே பலரும் உதவ யோசிக்கும்போது, தனது கன்றுக்குட்டியை ஈன்றெடுக்கத் தவித்திருந்த பசுவிற்குச் சென்னை காவல்துறை உதவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமை, சென்னை மயிலாப்பூர் லஸ் சாலை அருகே, நிறைமாதமாக இருந்த பசு ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. இதனை கவனித்த கான்ஸ்டபுள் ஒருவர், உடனே அந்த மாட்டை கடந்து செல்ல இருந்த வாகனங்களை வழித் திருப்பி, போக்குவரத்து பாதையை மாற்றியமைத்தார்.
பசுமாட்டிற்கு உதவிய சென்னை காவல்துறை
அப்போது அதன் காரணம் அறிந்தவுடன், பொதுமக்கள் சிலரும் அந்த மாட்டைக் காப்பாற்ற முன் வந்தனர். நீரில் தவுடு கலந்தும் மாட்டிற்கு உணவு அளித்தனர். இருப்பினும், கன்றுக்குட்டியை பெற்றெடுக்க மாட்டிற்கு எவ்வாறு உதவ வேண்டும் என்று தெரியவில்லை. எனவே, அனைவரும் இணைந்து சென்னை புளூ கிராஸ் அமைப்பிற்கு தொடர்பு கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவர்களை மாட்டை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் உதவியுடன் கன்றுக் குட்டியை ஈன்றெடுத்த மாடு, உடல்நலம் தேரி வருகிறது. இந்த செய்தி மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் இந்த செய்தியை அறிந்த சென்னை நகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், அந்த பசுவிற்கு உதவிய அனைத்து காவல்துறையினரையும் பாராட்டி கவுரவித்தார். அன்று இரவு மாட்டிற்கு உதவிய இரண்டு காவலர்களில் ஒருவர் பாண்டியன் என்பதும் மற்றொருவர் ஜெயசந்திரன் என்பதும் தெரிய வந்துள்ளது.
மனிதர்களுக்கே பச்சைத்தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் இந்த காலத்தில், வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவல்துறையினரை தமிழகமே பாராட்டி வருகிறது.