Chennai Tamil News: சொத்து வரி பொது மதிப்பாய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி குறித்த சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும் தனி போர்டல் மற்றும் தனி கவுன்டர்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியதாவது, "5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்த சென்னை மாநகராட்சி, இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெருநகர சென்னை மாநகராட்சியாக பறந்து விரிந்துள்ளது.
1688 முதல் 2022ஆம் ஆண்டு வரை படிப்படியாக வளர்ந்து இந்தியாவின் நான்கு பெருநகரங்களில் ஒரு நகரமாகவும், தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்ற பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.
85 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னையில், அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மழைநீர் வடிகால் வசதி, தூய்மை பணி மற்றும் சுகாதார சேவைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்களின் முக்கியமானது சொத்து வரி வருவாய்.
சென்னையில் சுமார் 13 லட்சம் வரிசெலுத்த வேண்டிய சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். 2022-23ஆம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியினை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.
சொத்து வரியினை மாநகராட்சியின் வலைத்தளம், 'நம்ம சென்னை' மொபைல் செயலி, இ-சேவை மையங்கள், குறிப்பிட்ட வங்கிகள் அல்லது வரி வசூலிப்பவரிடம் நேரடியாக பணம் செலுத்தலாம்." என்று அறிவித்துள்ளனர்.
சொத்துவரி செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சி தனி வலைத்தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற தனி வலைத்தள முகவரியில், தங்களுடைய மண்டல எண், பில் எண், பிரிவு குறியீடு, துணை எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வரி செலுத்தலாம். HDFC, Federal, DBS, AXIS ஆகிய வங்கிகளின் மூலம் வரி செலுத்துவோருக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil