/tamil-ie/media/media_files/uploads/2017/09/Valarmathi.jpg)
கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தாதனூரை சேர்ந்த வளர்மதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை மாணவியாக உள்ளார். கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தவர்.
இதையடுத்து, கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும், ஜெயந்தி என்பவருடன் இணைந்து மாணவி வளர்மதி துண்டு பிரசுரம் விநியோகித்துள்ளார். அப்போது, இருவரையும் கைது செய்த காவல்துறை, நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயந்தியை விடுவித்தனர். ஆனால், வளர்மதி மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவி வளர்மதி மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது தந்தை மாதையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மாணவி வளர்மதி குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டதை யடுத்து, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.