Advertisment

'கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க' - ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்

நினைவிடம் கட்டுவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க' - ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக கருத முடியாது என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செலவில் நினைவிடம் கட்டபட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா என்றும், அதனால் அவருக்கு நினைவிடம் கட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவு கட்டப்படுவதாகவும் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் விதிகளை மீறியதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் விசாரித்தனர். இந்த வழக்கு கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்த போது, தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் மற்ற மூவர் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டாலும், அப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. இன்றைய தேதியில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்பதால், அவருக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக அரசு, தன் அதிகார வரம்புக்கு உட்பட்டது தான் முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டு, கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கூடாது என்ற மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்புனை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், ராஜமாணிக்கம் அமர்வு, நினைவிட கட்டுமான பணிகளுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் தங்களின் தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் அவர் மரணம் அடைந்தார். அதனால் அவருக்கு எதிரான வழக்கை கைவிடப்பட்டது. எனவே அவரை குற்றவாளி என கருத முடியாது. மேலும் நினைவிடம் கட்டுவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர். எதிர் காலத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் போது கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் கட்டலாம் என தெரிவித்த நீதிபதிகள் கட்டுமான பணிகளுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர்.

Chennai High Court Jayalalithaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment