உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை உடனே தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுகவும் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை இன்னும் 10 நிமிடங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என்றும் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.