ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முதற் கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. மூன்றாவது கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் வகுப்புகள் முடங்கியது.
அதேபோல், எங்களை அழைத்து அரசு பேச வேண்டும் என கோரிக்கை விடுத்த அந்த அமைப்பினர், ஒருவேளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வருகிற செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவோம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே, தமிழக அரசுடன் அந்த அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வருடன் ஈரோட்டில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதல்வர் அளித்த நம்பிக்கையை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் சில பிரிவுகள் அறிவித்தன. ஆனால், அதற்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. அதேசமயம், அந்த அமைப்பின் சில பிரிவுகள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்தனர். அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் மீது இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், தங்களது போராட்டத்தை கைவிடாமல் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வருகிற 15-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.