தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமியை நீக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த சுஜிதா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013 - 2015-ஆம் ஆண்டு வரை மருத்து கல்வி இயக்குனராக கீதா லட்சுமி பதவி வகித்த போது முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக்கிற்கு சொந்தமான நிறுவனத்திற்கு 37 அரசு மருத்துவமனைகள், 20 மருத்துவ கல்லூரிகளில் துப்புறவு பணிகள் மேற்கொள்வதற்காக 130 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் முறைகேடாக வழங்கியுள்ளார். இதற்கு பிரதி பலனாக 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற வேண்டிய கீதா லட்சுமி துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு ஆளுநரின் அனுமதியில்லாமல் அரசு செலவில் தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்துள்ளார். பல்கலைக் கழகத்தில் 23 உதவியாளர் பணியிடங்ளுக்கு எழுத்து தேர்வு நடத்தாமல் லஞ்சம் பெற்று கொண்டு நியமனம் செய்துள்ளார். அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி தனது கணவர் மற்றும் சகோதரியை அரசு மருத்துவமனை ஆசிரியர்களாக சேர்த்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் வழங்கியதாக இவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இவர் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால் அவரை நீக்கிவிட்டு, புது துணைவேந்தரை நியமிக்க கோரி கடந்த மே மாதம் தமிழக அரசிற்கு அனுப்பிய மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக வருகிற செப்டம்பர் மாதம் 13-ம் தேதிக்குள் தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலாளர், ஆளுநர் செயலாளர், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கீதா லட்சுமி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.