சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டும் என தெற்கு ரயில்வேவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தொன்மையான ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம், ரூ 734.19 கோடி செலவில் உலகத்தரத்தில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்படுத்தும் மற்றும் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக அருகில் இருக்கும் கட்டிடங்கள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. ரயில் நிலையம் மேம்படுத்தப்படுவது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மரங்கள் அகற்றப்படுவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் ரயில் நிலையம் விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் அகற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மரங்கள் அகற்றப்படுவது குறித்து தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான நிபந்தனை பின்பற்றப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ரயில்வே விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக 12 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மரக்கன்றுகளை நடுவதிலும், மரங்களை இடமாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாட பசுமை தாயகம் அமைப்பிற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“