சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்ஷனா குமாரி என்பவர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக வைக்கப்படும் பேனர்களுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கன்காணிக்கப்பட வேண்டும் என நீதிபதி கூறினார்.
மேலும், உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைப்பதற்கு தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார். 1959-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அவ்வப்போது திருத்தவும் தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்த தீர்ப்பில், "கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாத பேனர்கள், கட் அவுட்கள் வைப்பதை தடுக்க வேண்டும். சுத்தமான சுகாதாரமான சூழ்நிலை நிலவ உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்துக்கு இடையூறாக கட் அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், "நீதிபதி வைத்தியநாதனின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" எனவும் நீதிபதி சத்தியநாராயணன் முன்பு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இதை வழக்காக விசாரிக்க எந்த முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் பிழை இருப்பதாகவும் கருதவில்லை. எனவே, இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்தால், வழக்கமான பட்டியலில் வரும் போது அது விசாரிக்கப்படும். இதனால், நீங்கள் மனுவாக தாக்கல் செய்யுங்கள். அப்படி தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை பட்டியலில் வந்தால் விசாரிக்கப்படும். அல்லது, அடுத்த வாரம் விசாரிக்கப்படும்." என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.