14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, காமக்கொடூரன் ஒருவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதனால் கருவுற்ற அச்சிறுமி, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த குழந்தைகள் நலக் குழு, அவரது வயிற்றில் 18 வார சிசு இருப்பதை கண்டறிந்தனர். அந்த சிசுவைக் கலைக்க அனுமதி கோரி, குழந்தைகள் நலக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, இதுசம்பந்தமாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மகப்பேறியல் துறை தலைவர் கருத்தை அறிந்து தெரிவிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டார். இதன்படி, மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மகப்பேறியல் துறை தலைவர் மருத்துவர் வசந்தா, சிறுமியின் கருவை விரைவில் கலைக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும், மருத்துவரின் கருத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக சிறுமியின் கருவை கலைக்க அனுமதியளித்து நீதிபதி ராஜா உத்தரவிட்டார்.